கொள்ளையடிக்க சென்ற வீட்டிற்குள் சிக்கிகொண்ட திருடன்: பொலிசாரை உதவிக்கு அழைத்த வினோத சம்பவம்…!!
ஜேர்மனி நாட்டில் கொள்ளையடிக்க சென்ற வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக சிக்கி கொண்ட திருடன் ஒருவன் உதவிக்கு பொலிசாரை அழைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் போன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள குடியிருப்பில் புகுந்து கொள்ளையடிக்க திருடன் ஒருவன் திட்டம் தீட்டியுள்ளான்.
தகுந்த ஏற்பாடுகளை செய்துகொண்டு அந்த திருடன் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் அந்த வீட்டின் நுழைவு கதவினை உடைக்க முயற்சி செய்துள்ளான்.
நீண்ட நேரம் முயற்சி செய்தும் கதவை உடைக்க முடியாததால், அருகில் இருந்த ஒரு சுவர் வழியாக ஏறி வீட்டிற்குள் குதித்துள்ளான்.
ஒவ்வொரு அறையாக வலம் வந்த திருடன், அங்கிருந்த விலை உயர்ந்த அப்பிள் நோட்புக்(Apple NoteBook) மற்றும் ஒரு கைப்பேசியை எடுத்துக்கொண்டான்.
பின்னர், தனது வீட்டிற்கு திரும்பிச்செல்லும் பயணத்தில் சாப்பிடுவதற்கு சிறிது நொறுக்கு தீணிகளையும் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டான்.
இருப்பினும், திருடிய பொருட்களால் திருப்தி அடையாத அந்த திருடன், அங்கிருந்த பழைய சாமான்கள் போட்டு வைக்கும் ஒரு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியுள்ளான்.
அறையில் இருந்த சில பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பிய அந்த திருடனால், அறையின் கதவினை திறக்க முடியவில்லை.
கதவு எதிர்பாராதவிதமாக வெளிப்புறமாக தாழிட்டு திருடனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நேரமாக போராடியும் கதவினை திறக்க முடியாததால், வேறு வழியின்றி அந்நகர பொலிசாரை உதவிக்கு அழைத்துள்ளான்.
திருடனின் அழைப்பை பெற்று வீட்டிற்குள் நுழைந்த பொலிசார், திருடனிடம் இருந்த பொருட்களை கைப்பற்றி அவனை கைது செய்துள்ளனர்.
43 வயதுடைய அந்த திருடனிடம் விசாரணை செய்ததில், அவன் ஏற்கனவே பல கொள்ளைகளில் ஈடுபட்டு பொலிசாருக்கு பரிச்சயமானவன் என தெரியவந்துள்ளது.
எனினும், சில நிபந்தனைகளை விதித்து திருடனை விடுதலை செய்த பொலிசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
Average Rating