வகுப்பில் சிறுநீர் கழித்த குழந்தையை சூடான சறுக்குமரத்தில் அமரவைத்து கொடுமைப்படுத்திய பள்ளி ஆசிரியை…!!
ஆந்திர மாநிலத்தில் வகுப்பறைக்குள் சிறுநீர் கழித்த 4 வயது சிறுமியை உச்சிவெயில் நேரத்தில் சூடான இரும்பு சறுக்குமரத்தில் அமரவைத்து கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இங்குள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம், சட்டாப்பர்ரு கிராமத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் படித்து வருபவர் ஜுவாலாஸ்ரீ(4). சம்பவத்தன்று வகுப்பறைக்குள் ஜுவாலாஸ்ரீ சிறுநீர் கழித்துவிட்டதற்காக அவளை தண்டிக்கும் நோக்கத்தில் வகுப்பாசிரியை அஞ்சனா தேவி என்பவர், உச்சிவெயில் நேரத்தில் அவளை பள்ளி மைதானத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கிருந்த இரும்பு சறுக்குமரத்தின்மீது ஜுவாலாஸ்ரீயை ஏற்றி அமரவைத்த ஆசிரியை, குழந்தை வேதனையில் அலறித்துடிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் அதை மிரட்டிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கொதிக்கும் இரும்பு தகடின்மீது அமர்ந்திருந்ததால் ஜுவாலாஸ்ரீயின் அந்தரங்க உறுப்பு புண்ணாகிவிட்டதை கண்ட அவளது பெற்றோர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
இந்த காட்டுமிராண்டித்தனமான தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகத்தின்மீது போலீசில் புகார் அளித்தனர். இச்சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியானதும், அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரும், சமூக ஆர்வலர்களும் அப்பள்ளியின் வாசலில் கூடி இந்த கொடூரத்துக்கு காரணமான ஆசிரியைமீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Average Rating