இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் பலி –கொம்மாதுறையில் சம்பவம்..!!
தகடில்லாத மோட்டார் சைக்கிளை கண்மூடித் தனமாகச் செலுத்தி வந்த நபர் வயோதிபப் பெண்ணின் மீது மோதியதில் வாழைச்சேனை கண்ணகிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம்பிள்ளை தில்லையம்மா (வயது 65) என்பவர் கொல்லப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை [ 13.10.2015 ] இரவு ஏழு மணியளவில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள உமா மில் வீதி கொம்மாதுறையில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, மேற்படி வயோதிபப் பெண் உள்வீதியிலுள்ள கடைக்கு வந்து தனது பேரப்பிள்ளைக்கு சூப்பி வாங்கிக் கொண்டு திரும்பிய சமயம் அதிவேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் மூதாட்டி மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
படுகாயமடைந்த மூதாட்டியை உறவினர்களும் அயலவர்களும் சேர்ந்து செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விரையப்பட்ட சமயம் வழியிலேயே மூதாட்டியின் உயிர் பிரிந்துள்ளது.
இதனிடையே இலக்கத் தகடில்லாத மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்து மூதாட்டியை மோதிய நபர் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டு தலைமறைவாகியுள்ளார்.பொலிஸார் மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் சமீபத்தில்தான் கட்டார் நாட்டிலிருந்;து வந்து புதிய மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்தவர் என்றும் சம்பவம் இடம்பெற்றபோது மது போதையிலிருந்துள்ளார் என்றும் தமக்குத் தெரியவருவதாக கொல்லப்பட்ட மூதாட்டியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரான் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேக நபரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
Average Rating