புலிகள் படகு தளம் மீது குண்டுவீச்சு
இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் படகு தளம் மீது அந்நாட்டு விமானப்படை விமானங்கள் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே சமீப காலமாக அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்ற மோதலில் 5 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கிளிநொச்சியில் உள்ள இரனைமாடு படகு தளத்தை குறிவைத்து இலங்கை ராணுவத்தின் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து கடும் தாக்குதல் நடத்தியதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறியை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானிகள் தெரிவித்திருப்பதாக கூறியுள்ள அந்த அதிகாரி, எனினும் இது தொடர்பான விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனிடையே புலிகளின் படகு தளம் தாக்கப்பட்டதாக கூறப்படுவதை புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் மறுத்துள்ளார். குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இளந்திரையன் கூறியுள்ளார்.