குடும்பத் தகராறில் மனம் உடைந்த மயான உதவியாளர் தற்கொலை
குடும்பத் தகராறில் மனம் உடைந்த மயான உதவியாளர் சுடுகாட்டில் தனது பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு முன்பு நின்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 32). இவர் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் மயான உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மனைவிகளும், 3 குழந்தைகளும் இருக்கிறார்கள். மேகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் இதுதொடர்பாக குடும்பத்தில் கணவன் மனைவிகள் இடையே தகராறு அடிக்கடி நடப்பது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது. வழக்கம்போல மேகநாதன் குடித்துவிட்ட வீட்டிற்கு சென்றதாகவும் குடும்ப செலவுக்கு பணம் தராததால் அவருக்கும் மனைவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மேகநாதன் தான் வேலை பார்த்த மூலக்கொத்தளம் சுடுகாட்டிற்கு சென்றார். அங்கு தனது பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு முன்பு நின்று மண்ணெண்ணெயை தன் உடல் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்தார்.
உடல் முழுவதும் மளமளவென தீ பரவியதால் வேதனையை தாளமுடியாமல் மேகநாதன் அலறினார். உடனடியாக சுடுகாட்டின் அருகே வசித்துவந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து சிகிச்சைக்காக மேகநாதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சிங் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.