வட மாவட்டங்களைக் கலக்கிய கொள்ளையன் கைது
வட மாவட்டங்களைக் கலக்கிய நெடுஞ்சாலை கொள்ளையன் கைது செய்யப்பட்டான். வேளச்சேரி, அடையாறில் கடந்த சில நாட்களாக செல்போன்கள் திருடப்பட்டன. இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுதா (எ) கண்டெய்னர் சுதாகர் (29), மணிகண்டன் (23) ஆகியோரை கைது செய்தனர். சுதாகரின் வாக்குமூலம்: 2001ம் ஆண்டு முதல் திருடுகிறேன். திண்டிவனம், விக்கிரவாண்டி, திருவேற்காடு, வடக்கு கடற்கரை, மாதவரம், விழுப்புரம், செஞ்சி, பூந்தமல்லி, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் கண்டெய்னர் லாரியை மடக்கி, டிரைவரை கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்ததாக என் மீது வழக்கு உள்ளது. கடந்த ஆண்டு என்னை பிடிக்க வந்த விழுப்புரம் போலீசாரை, கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கும் நிலுவையில் உள்ளது. சமீபத்தில், வளசரவாக்கத்தில் அழகு நிலையத்தில் நடந்த கொள்ளை வழக்கிலும், மதுரவாயலில் நடந்த கொள்ளை வழக்கிலும் சம்பந்தப்பட்டதாக தேடப்பட்டு வந்தேன். பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியனின் கூட்டாளியாக செயல்பட்டு வந்தேன். இவ்வாறு சுதாகர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து சுதாகர், மணிகண்டன் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.