பூந்தமல்லியில் பூட்டிய வீட்டில் பெண் கொலை: உறவினர்களிடம் விசாரணை…!!
பூந்தமல்லி, சக்திநகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் தனலட்சுமி (வயது 65). இவருடைய கணவர் ராமலிங்கம். தபால் துறையில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதையடுத்து கணவரின் பென்சன் பணத்தில் தனலட்சுமி தனியாக வாழ்ந்து வந்தார்.
நேற்று மதியம் பூட்டிக் கிடந்த தனலட்சுமியின் வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு அழுகிய நிலையில் தனலட்சுமி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் இறந்து ஒருவாரம் இருக்கலாம் என்று தெரிகிறது.
தனலட்சுமி அணிந்து இருந்த நகை அப்படியே இருந்தது. வீட்டின் பீரோவும் உடைக்கப்படவில்லை.
எனவே அடிக்கடி வீட்டிற்கு வந்த நபரே கொள்ளை முயற்சியில் அவரை கொலை செய்து தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
தனலட்சுமி உறவினர்களுக்கு அடிக்கடி பணம் கொடுத்து உதவி வந்துள்ளார். அவரிடம் அதிக அளவில் பணம் இருப்பதை அறிந்தவர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக உறவினர்களிடம் விசாரணை நடக்கிறது. தனலட்சுமியை அடிக்கடி சந்திக்க வருபவர்கள் யார்–யார்? என்ற விவரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.
Average Rating