இந்தோனேசியா: நடன கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் கருகி பரிதாப பலி…!!
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நடன கிளப் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 70-க்கும் அதிகமானோர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுலவேசி மாகாணத்தின் தலைநகர் மனடோவில் உள்ள மூன்றடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது விபத்து நிகழ்ந்த அறைக்கு அருகே பக்கத்து அறையில் (கிளப்) நூற்றுக்கும் மேற்பட்டோர் பாடிக்கொண்டிருந்தனர்.
தீ மளமளவென பரவியதும் அச்சடைந்த சிலர் ஜன்னல் வழியே எகிறி குதித்துள்ளனர். வெளியேறுவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே இருந்ததால் பலர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். அப்போது பரவிய கரும்புகையால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 7 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவல் அளித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக தீயணைப்பு வாகனங்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரும் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என்றும், அதில் பெரும்பாலானோர் மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Average Rating