பாகிஸ்தான் அதிபர் முஷரப் இன்று சவுதி அரேபியா செல்கிறார்; மன்னருடன் ஆலோசனை நடத்துகிறார்
பாகிஸ்தான் அதிபர் முஷரப் இன்று (செவ்வாய்க்கிழமை) சவுதி அரேபியா செல்கிறார். அங்கு அவர் மன்னர் அப்துல்லாவை சந்தித்து பேசுகிறார். அப்போது பாகிஸ்தானில் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அவரது இநத பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவது குறித்தும் மன்னருடன் ஆலோசிக்கப்படும் என்றும் இது தொடர்பான முக்கிய முடிவு அடுத்தவாரம் எடுக்கப்படும் எனறும் தெரிகிறது. இதற்கிடையில் சவுதி அரேபியாவில் தங்கி இருக்கும் நவாஸ் ஷெரீப்பையும் முஷரப் சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது. இதற்கு நவாஸ் ஷெரீப் மறுத்து விட்டார். என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று கூறிவிட்டார். முஷரப்புக்கு கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. அதுபோல அவரிடம் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் நவாஸ் ஷெரீப் கூறினார். இதனால் இருவரும் நேரடியாக சந்தித்து பேசமாட்டார்கள் என்று தெரிகிறது.