லாரி மோதி தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் பலி: தந்தை உயிர் தப்பினார்…!!
திருவள்ளூரை அடுத்த ஈக்காடுபகுதியை சேர்ந்தவர் தாஸ். கூலித்தொழிலாளி. இவரது மகள் ஸ்ரீமதி (வயது 18). பி.பார்ம் முடித்துள்ள இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
ஸ்ரீமதியை தினமும் தந்தை தாஸ் மொபட்டில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இறக்கி விடுவது வழக்கம். அங்கிருந்து அவர் மின்சார ரெயிலில் வேலைக்கு சென்று வந்தார்.
இன்று காலை தாஸ் மொபட்டில் மகள் ஸ்ரீமதியை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் ரெயில் நிலையம் நோக்கி சென்றார். திருவள்ளூர் தீயணைப்பு நிலையம் அருகே சென்றபோது பின்னால் கர்நாடக மாநிலத்தில் இருந்து பூந்தமல்லிக்கு இரும்பு லோடு ஏற்றிய கண்டெய்னர் லாரி வந்தது.
திடீரென மொபட் மீது லாரி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ஸ்ரீமதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தாஸ் இடதுபுறம் விழுந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
கண்முன்னே மகள் பலியானதைக் கண்டு அவர் அலறி துடித்தார். விபத்து நடந்ததும் லாரியில் இருந்த டிரைவரும், கிளீனரும் தப்பி ஓடிவிட்டனர்.
நடுரோட்டில் லாரி நின்றதால் சென்னை– திருப்பதி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர். ஸ்ரீமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Average Rating