முகப்பரு “கிரீம்’கள் பயன்படுத்தினால் விபரீதம் * 26 பேர் தற்கொலை செய்ததாக ஆய்வில் “திடுக்”
முகத்தில் தோன்றும் கரும் புள்ளிகளை அகற்றுவதற்காக விற்கப்படும் முகப்பூச்சு கிரீம் மருந்தை பயன்படுத்திய 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.முகப்பரு தொல்லையால் அவதிப்படுவோர் அதிகம். பருக்களை குணப்படுத்தி முகத்தை பொலிவுடன் வைக்கும் மருந்துகளை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆண்களும் இதை பயன்படுத்துகின்றனர். முகப்பரு மருந்துகளை பிரபலப்படுத்த கோடிக்கணக்கான பணத்தை செலவிடுகின்றன மருந்து கம்பெனிகள்.இதுபோல விற்கப்படும் முகப்பரு மருந்தை பயன்படுத்துவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுவதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தைப் பயன்படுத்துவோர் களைப்பு, கவலை மற்றும் மனச்சோர்வுக்கு உள்ளாகின்றனர் என்று இதுபற்றி நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. முகப்பரு மருந்துகளை பயன்படுத்துவோருக்கு தற்கொலை எண்ணம் அதிகரிப்பதாகவும் ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. முகத்தில் கரும்புள்ளிகளை அகற்றுவதற்காக பிரபல மருந்துக்கம்பெனி ஒரு முகபூச்சு கிரீமை அறிமுகப்படுத்தியது.இந்த மருந்தை பயன்படுத்திய 26 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் “ரோயெக்யூடன்’ என்ற பெயரில் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இது”ஐசோடிரேட்’ என்ற பெயரில் விற்கப்படுகிறது. “எக்ஸ்பரிமென்ட் பயோலாஜி அண்டு மெடிசின் டுடே’ என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதை பயன்படுத்துவோருக்கு மனத்தளர்வு, கவலை, விரக்தி போன்ற பிரச்னைகள் உருவாகின்றன. அவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். இதை கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.