ஆப்கானிஸ்தானில் ஸ்பெயின் தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய தலிபான்கள்: 4 போலீசார் பலி…!!
ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கந்தகார் விமான நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்த துயரம் அடங்குவதற்குள் நேற்று தலைநகர் காபுலில் உள்ள ஸ்பெயின் தூதகரத்தை தலிபான் தீவிரவாதிகள் நேற்று சுற்றி வளைத்தனர். அத்துடன் குண்டுகளை வெடிக்கச் செய்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள்.
இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இச்செய்தி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச் சண்டை நடத்தினார்கள்.
நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப்பிறகு நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். துரதிருஷ்டவசமாக நான்கு போலீசார்கள் வீர மரணம் அடைந்தனர் என்று உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கார் குண்டு தாக்குதலில் ஸ்பெயின் போலீஸ் ஒருவரும் பலியாகியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலை ஏற்படுவதற்காக தலிபான் தீவிராதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்த அடுத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக உளவுப்படை தலைவர் ராஜினாமா செய்துள்ளதால் அரசு சங்கடத்தில் உள்ளது.
Average Rating