பெரியபாளையம் அருகே கிராம உதவியாளர் படுகொலை…!!
பெரியபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தமிழ்தென்றல் (39).
இவருக்கு விஜயலட்சுமி (30) என்ற மனைவியும் சஞ்சய் (14), ஷாம் (13), ஐஸ்வர்யா (9) ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.
தமிழ்தென்றல் – விஜயலட்சுமி காதலித்து 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அரசு மருத்துவமனையில் ஊழியராக இருந்த தமிழ் தென்றலுக்கு பின்னர் கிராம உதவியாளர் வேலை கிடைத்ததும் 9 மாதத்துக்கு முன் அப்பணியில் சேர்ந்தார்.
பெரியபாளையம் அருகே உள்ள சீஞ்சேரி கிராமத்தில் கிராம உதவியாளராக தமிழ்தென்றல் பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு தமிழ்தென்றல் வீட்டில் தனியாக தூங்கினார். மனைவி மற்றும் குழந்தைகள் அருகில் உள்ள தேவாலயத்தில் நடந்த அமாவாசை தின இரவு பூஜையில் கலந்து கொள்ள சென்று விட்டனர். பூஜை முடிந்து விஜய லட்சுமி நள்ளிரவு 1.30 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.
வீட்டு வாசலில் ரத்தம் வழிந்தோடி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே தமிழ்தென்றல் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அலறினார்.
தமிழ்தென்றலின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் வாய், வயிறு, கைகளில் வெட்டுக்காயம் இருந்தது. கொலையாளிகள் தூங்கிக்கொண்டு இருந்த அவரை தட்டி எழுப்பி கொன்றது தெரிய வந்தது.
விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு விட்டனர்.
இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து ராமலிங்கம் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
திருவள்ளூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் சுமார் 1 கிலோ மீட்டர் ஓடி நின்று விட்டது.
கொலை செய்தது யார்? எதற்காக கொன்றார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating