கேரள முன்னாள் அரசியல்வாதியின் புதுமைச் சாதனை
கேரளாவைச் சேர்ந்த முதுபெரும் காங்கிரஸ்காரரான ஆபிரகாம் புதுசேரி என்ற 78 வயது முதியவர், தன்னைப் பற்றி பல்வேறு நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், புகைப்படங்களைத் தொகுத்து புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுலம் மாவட்டம் சேரநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். காங்கிரஸ்காரரான இவர் இளைஞர் காங்கிரஸ் கட்சி 1957ம் ஆண்டு, ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உதயமானபோது கேரள மாநிலம் சார்பில் அதில் கலந்து கொண்டார். இவர் தற்போது தனது 18 வயது (1948ம் ஆண்டு முதல்) முதல் இப்போது வரை உள்ள கால கட்டத்தில் தன்னைப் பற்றி பல்வேறு நாளிதழ்கள், இதழ்களில் வெளியான கட்டுரைகள், புகைப்படங்கள், செய்திகளை சேகரித்து புதிய சாதனை படைத்துள்ளார். கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், புகைப்படங்களை இதுபோல அவர் சேகரித்துள்ளார். இந்த அரிய செயலுக்காக லிம்கா சாதனைப் புத்தகத்தில் ஆபிரகாமின் பெயர் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. மொத்த தொகுப்புகளையும் இணைத்து ஒரு நூலாகவும் இதை அவர் கொண்டு வந்துள்ளார். 480 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த நூல் 4.5 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதுகுறித்து ஆபிரகாம் கூறுகையில், எனக்கு 78 வயதானாலும் கூட, இன்னும் கூட என்னைப் பற்றிய கட்டுரைகள், புகைப்படங்களை தேடித் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் 2ம் பாகத்தைக் கூட நான் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன் என்று கூறுகிறார்.ஆபிரகாமின் இந்த சாதனையைப் பாராட்டி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆபிரகாமுக்கு கடிதம் எழுதியுள்ளார்.