யாழில் இனந்தெரியாதவர்களால் இருவர் சுட்டுக்கொலை ..!
யாழ்ப்பாணத்தில் இருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் வேளையின் பின்னர் இடம்பெற்றுள்ளது. வலிகாமம் மாகியப்பிட்டியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் சங்கானையைப் பிறப்பிடமாகவும் அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் விஜயகுமார் (வயது 27) என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரது சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று முன்தினமிரவு 8.10 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம் ஒன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலமாக ஒப்படைக்கப்பட்டவர் யாழ்ப்பாணம், பிறவுண் வீதி, இலக்கம் 179ஐச் சேர்ந்த சின்னத்தம்பி தில்லைநடராசா (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நேற்று மாலை இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இக்கொலை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.