வார்ன் உலக சாதனை சமன் செய்தார் முரளிதரன்
இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில் 4 விக்கெட் கைப்பற்றிய முரளிதரன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் உலக சாதனையை (708 விக்கெட்) சமன் செய்தார். இலங்கை, இங்கிலாந்து அணிகளிடையே முதல் டெஸ்ட் போட்டி கண்டி அஸ்கிரியா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 188 ரன்களுக்கு சுருண்டது. ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. வாகன், பெல் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்தது. வாகன் 37, பெல் 83, பீட்டர்சன் 31 ரன் எடுத்து முரளிதரனின் அபாரமான சுழற்பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். அடுத்து முரளி பந்தில் பிரசன்ன ஜெயவர்த்தனே கேட்ச் பிடிக்க ரவி போபாரா ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் தனது 708வது விக்கெட்டை வீழ்த்திய முரளிதனர், ஆஸி. வீரர் ஷேன் வார்ன் உலக சாதனையை சமன் செய்தார். மழை காரணமாக 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்துள்ளது. முரளிதரன் இன்று மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தி புதிய உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமியார் பெருமிதம்: வார்ன் சாதனையை முரளிதரன் சமன் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக, சென்னையில் உள்ள அவரது மாமியார் டாக்டர் நித்யா ராமமூர்த்தி கூறினார். முரளி உலக சாதனை படைப்பதை நேரில் பார்ப்பதற்காகக் கண்டி செல்ல உள்ளதாகக் கூறிய அவர், டெஸ்ட் போட்டிகளில் முரளி ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்துவார் என நம்பிக்கை தெரிவித்தார்.