போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற தொழிலாளி சாவு…!!
ஆம்பூர் அருகே உள்ள மாச்சம்பட்டு சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40). பி.காம் பட்டப்படிப்பு படித்துவிட்டு, தன்னை ஒரு டாக்டர் எனக்கூறி கொண்டு அதே பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்தார்.
கோவிந்தராஜ் போலி டாக்டர் என்பதை அறியாமல், மாச்சம்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் அவரிடம் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களுக்கு கோவிந்தராஜ் மறைமுகமாக சில மெடிக்கல் ஷாப் உரிமையாளர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு தேவையான மருந்து மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்துள்ளார். இதனால் சிகிச்சை பெறுபவர்களுக்கு கோவிந்தராஜ் மீது சந்தேகம் வராமல் இருந்தது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த லோகன் (55) என்ற கூலித் தொழிலாளி கால் வலிக்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோவிந்தராஜிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.
அதன்பிறகு லோகனின் கால் சீல் வைத்து அழுகிய நிலையில் ஆனது. இதற்கு தவறான சிகிச்சையே காரணம் என லோகனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த லோகன், கிளீனிக்கிற்கு சென்று கோவிந்தராஜிடம் தட்டிக் கேட்டார். அதற்கு கோவிந்தராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து லோகன், உமராபாத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கோவிந்தராஜ் போலி டாக்டர் என்பது தெரிந்தது. கோவிந்தராஜை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.
இந்த நிலையில் புகார் கொடுத்த லோகனின் உடல்நிலை மிகவும் மோசமானது. அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி லோகன் பரிதாபமாக இறந்தார். இதனால் உமராபாத் போலீசார், கைதான போலி டாக்டர் கோவிந்தராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Average Rating