சீனாவில் பூமி அதிர்ச்சி: 18 பேர் சாவு; 60 பேர் படுகாயம்
சீனாவில் நேற்று காலை ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் 18 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாநிலம் யுன்னான். இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஜாவோட்டாங் நகரத்தில் இருந்து 56 மைல் தொலைவில் உள்ளது யான்ஜின் என்ற ஊர். மலைகள் நிறைந்த இந்த ஊரில் மலை அடிவாரத்தில் சுமார் 4 லட்சம் பேர் வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர்.
நேற்று காலை 6.40 மணி அளவில் இந்தப் பகுதியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த பூகம்பம் ரிக்டர் ஸ்கேல் அளவில் 5.1 ஆக இருந்தது. பூகம்பம் ஏற்பட்டதும் வீடுகள் குலுங்கி இடிந்து விழுந்தன. அந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடினார்கள்.
ஆனாலும் இடிபாடுகளில் சிக்கி 18 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பூமி அதிர்ச்சி பற்றிய தகவல் கிடைத்ததும் ஏராளமான மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்று தேடி வருகிறார்கள்.