தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து தனது கிராமத்தை பாதுகாக்க ஆயுதம் ஏந்திப் போராடிய 10 வயது சிறுவன்..!!
தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து தனது கிராமத்தைப் பாதுகாக்க உதவியதன் மூலம் வீரச் சிறுவனாக கௌரவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் அந்த தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
உருஸ்கான் பிராந்தியத்தின் தலைநகர் திறின் கொட்டில் வைத்து வாஸில் அஹ்மெட் கொல்லப்பட்டுள்ளான். தீவிரவாதிகள் மேற்படி சிறுவனின் தலையில் இரு தடவைகள் சுட்டு அவனைப் படுகொலை செய்துள்ளனர்.
மேற்படி சிறுவன் தனது மாமனாருடன் இணைந்து தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடியுள்ளான். அவன் சீருடையும் தலைக் கவசமும் அணிந்து தன்னியக்க துப்பாக்கியுடன் இருப்பதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் சமூக இணையத்தளங்களில் வெளியாகியதையடுத்து அவன் உலகளாவிய பிரபலத்தைப் பெற்றிருந்தான்.
இந்நிலையில் தலிபான் தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் வாஸில் அஹ்மெட்டை அவரது வீட்டிற்கு அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டதாக உருஸ்கான் பிராந்திய பிரதி பொலிஸ் தலைவர் ரஹிமுல்லாஹ் கான் தெரிவித்தார்.
அந்த சிறுவன் தனது தந்தை தலிபான் தீவிரவாதிகளுடனான போராட்டத்தில் மரணமானதையடுத்து அந்தத் தீவிரவாதிகளால் தமது கிராமம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க கிராமவாசிகளுடன் இணைந்து போராடியிருந்தான்.
அவனது வீரச் செயலை உள்ளூர் பொலிஸார் பாராட்டிக் கௌரவித்துள்ளனர்.
அதேசமயம் ஆப்கானிஸ்தான் சுதந்திர மனித உரிமைகள் ஆணையகமானது அந்தச் சிறுவனின் மரணத்துக்கு தலிபான் தீவிரவாதிகள் மட்டுமல்லாது அவனை ஆயுதம் ஏந்துவதற்கு ஊக்குவித்த அவனது குடும்பத்தினரும் அரசாங்கமும் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது.
அந்த சிறுவன் கிராம மக்களைப் பாதுகாக்க அல்லாது தனது தந்தை யின் மரணத்துக்கு பழி தீர்க்க மேற்படி போராட்டத்தில் இணைந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் இந் நிலையில் பொலிஸார் இதனை சட்டவிரோதமான நடவடிக்கையாக கருதாது சிறுவனைப் பாராட்டி ஊக்குவித்து பிரபலப்படுத்தி அவனை தலிபான்கள் அடையாளம் கண்டு தாக்குதல் நடத்துவதற்கு வழிவகை செய்துள்ளதாகவும் அந்த ஆணையகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் ஆயுதங்களை ஏந்துவது சட்டவிரோதமானதாகும்.
Average Rating