பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை: 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு சிபி மாவட்டம், சங்கான் பகுதியில் பலுசிஸ்தான் விடுதலை படையினர் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வருகிற தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று அங்கு விரைந்து தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட பகுதிகளை சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் கூறினர்.
ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்காமல், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் தங்கள் துப்பாக்கிகளால் தக்க பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. முடிவில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 12 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். 3 பதுங்குமிடங்கள் நிர்மூலமாக்கப்பட்டன.
இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாத தளபதி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்” என்றார்.
பலுசிஸ்தான் மாகாண அரசு செய்தி தொடர்பாளர் அன்வர் அல் ஹக் காக்கர் கூறுகையில், “சிபியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தளபதி அஸ்லாம் ஆச்சோ கொல்லப்பட்டார்” என்றார்.
இந்த துப்பாக்கிச்சண்டையின்போது தீவிரவாதிகள் வசமிருந்து வெடிகுண்டுகள், ராக்கெட்டுகள் என திரளான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை ரகசிய இடத்தில் கொண்டுபோய் பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளும், பிடிபட்ட தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினர் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியதுடன், கியாஸ் குழாய்களையும் தகர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating