சிரஞ்சீவியை விமர்சிக்கும் ரோஜா
சிரஞ்சீவி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி ஒரு கத்தியாக ஆந்திர அரசியலின் தலை மேல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சிரஞ்சீவியின் ரசிகர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகள் தவிர யாரும் அவரது அரசியல் பிரவேசத்தை விரும்பவில்லை. குறிப்பாக அரசியல் கட்சிகள்! தெலுங்குதேச கட்சியின் பிரமுகர் ஆகிவிட்ட ரோஜா சமீபத்தில் திருமண விழா ஒன்றில் சிரஞ்சீவியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். சிரஞ்சீவி ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள காபு சாதியைச் சேர்ந்தவர். காபு இனத்துக்கென பெரிய தலைவர்களோ, கட்சிகளோ இல்லை. சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தால், வேறு அரசியல் கட்சிகளில் இருக்கும் காபு சாதியினர் சிரஞ்சீவியின் பின் அணி திரள்வார்கள். அப்படியொன்று நடந்தால், மற்ற கட்சியினர் முதலமைச்சர் நாற்காலியை நிரந்தரமாக மறந்துவிட வேண்டியதுதான். சிரஞ்சீவியின் சாதிப் பின்னணியைக் குறிப்பிட்டுப் பேசிய ரோஜா, சிரஞ்சீவி அரசியலுக்கு வருவது நல்லதல்ல என்று விமர்சித்ததுடன், சாதி அரசியலை ஒழிக்க வேண்டும் என்றும் கூறினார். ரோஜாவின் இந்தப் பேச்சு சிரஞ்சீவியின் ரசிகர்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. கவர்ச்சி கடைவிரித்தவர்கள் அரசியல் கருத்துச் சொல்லும் அளவுக்கு வளர்வதும் சாதி அரசியல் அளவுக்கு ஆபத்தானதுதான்!