கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 3 குழந்தைகளின் கழுத்தை பிளேடால் அறுத்த சித்தி..!!
திருப்பூர் வீரபாண்டி சீனிவாச நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். இவரது முதல் மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு நதியா (7), ஸ்ரீஷா (5) என்ற மகள்களும், ஜெயராஜ் (4) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் முத்துலட்சுமி இறந்து விட்டார். சிறிய குழந்தைகளாக இருப்பதால் வளர்க்க கஷ்டப்பட்ட சுப்பிரமணி உறவினரான அபிராமி என்பவரை 2–வது திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சுப்பிரமணி எதிர்பார்த்தது போல் அபிராமி இல்லை. அவர் தனது கணவரின் முதல் மனைவி குழந்தைகள் மீது வெறுப்பில் இருந்தார். கணவரிடம் 3 குழந்தைகளையும் விடுதியில் சேர்க்கும்படி கூறினார்.
ஆனால் சுப்பிரமணியோ தனது குழந்தைகள் தன்னுடன் தான் இருக்கும் என கூறி மறுத்து விட்டார். இதன் காரணமாக கணவன்–மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று காலையும் அபிராமி கணவரிடம் குழந்தைகளை எங்காவது கொண்டு சென்று விடும்படி கூறினார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை உருவானது.
இதனால் சுப்பிரமணி வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது தரையில் அபிராமி மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரது அருகில் குழந்தைகள் நதியா, ஸ்ரீஷா மற்றும் ஜெயராஜ் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அபிராமியை தண்ணீர் தெளித்து எழுப்பினார்.
மயக்கம் தெளிந்த அபிராமி கடைவீதிக்கு சென்று வந்தபோது ஒரு வாலிபர் பின்தொடர்ந்து வந்து தன்னை தாக்கியதாகவும், குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டதாகவும் கூறினார்.
படுகாயத்துடன் இருந்த குழந்தைகளை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சுப்பிரமணி சேர்த்தார். சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அபிராமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.
சந்தேகமடைந்த போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை நதியாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது சித்தி அபிராமி தன்னையும், தங்கை மற்றும் தம்பியை வலுக்கட்டாயமாக பிளேடால் கழுத்தை அறுத்ததாக கூறினார்.
குழந்தைகளால் பிரச்சினை ஏற்படுவதால் 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்து விட்டு நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் அபிராமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating