தென் கொரியாவுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா ஏவுகணை வீச்சு…!!
தென்கொரியாவும், வடகொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக இருந்து வருகின்றன. இதில் தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதற்காக அமெரிக்க படைகள் தென் கொரியாவில் முகாமிட்டு உள்ளன.
இதனால் அமெரிக்காவை வட கொரியா மிரட்டி வருகிறது. வட கொரியா அணு குண்டுகளை தயாரித்து வைத்திருப்பதுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் தயாரித்து வைத்து உள்ளது.
இவற்றின் மூலம் அமெரிக்காவை ஒட்டு மொத்தமாக அழித்து விடுவோம் என்று வட கொரியா சமீபத்தில் மிரட்டல் விடுத்தது.
இந்த நிலையில் வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை மிரட்டும் வகையில் அவர்கள் போர் பயிற்சி நடத்திக் கொண்டு இருந்த பகுதியை நோக்கி வட கொரியா 2 ஏவுகணைகளை வீசியது.
இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. வட கொரியாவின் ஏவுகணை வீச்சுக்கு பதிலடியாக அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating