டெஸ்ட் போட்டித்தொடரை வென்றுள்ளது இலங்கை அணி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழை காரணமாக சனிக்கிழமை ஐந்தாவது நாள் மாலை வெற்றி தோல்வியின்றி நிறைவுபெற்றிருக்கிறது. ஆனாலும் இந்த இன்வெஸ்ட் டெஸ்ட் போட்டித்தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றுள்ள இலங்கை அணி சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் தரப்படுத்தலில் முன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. இலங்கை அணியின் முதலாவது இன்னிங்சில் 499 ஒட்டங்கள் எடுத்தது. அடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்சில் வெறும் 81 ஓட்டங்களிற்குள் சுருண்டது. ஃபாலோ ஆன் முறைப்படி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 251 ஓட்டங்களிற்கு ஆறு முன்வரிசை வீரர்களையும் இழந்து தவித்துக் கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டு அந்த அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியது. இந்த தொடரில் தனது அணி இலங்கை அணியிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருப்பதாகவும், இலங்கை அணிவீரர்கள் சகல துறைகளிலும் மிகவும் திறமையாக விளையாடினார்கள் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்தார். இதே பாணியில் தமது அணி வீரர்கள் தொடர்ந்தும் விளையாடினால் டெஸ்ட் போட்டியிலும் உலகின் தலைசிறந்த அணியாகும் வாய்ப்பினை அது விரைவில் எட்டிவிடும் என்று நம்பிக்கை வெளியிட்டார் இலங்கை அணியின் தலைவரும் இந்த தொடரினதும், மூன்றாவது டெஸ்ட் போட்டியினதும் நாயகனாகத் தெரிவு செய்யப்பட்ட மஹேல ஜயவர்த்தன.