மரத்தின் மேல் ஏறி கணவனும் கீழிருந்து மனைவி, பிள்ளைகளும் உண்ணாவிரதம்..!!
15 வருடங்களாக தாம் இருந்த இடத்துக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மஹாவலி அதிகார சபையின் அதிகாரிகளால் பிற்போடப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நபரொருவர் இன்று அதிகாலை மரத்தின் மேல் ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அகுணுகொலபெலச மஹாவலி அதிகாரசபை அலுவலகத்தின் முன்னாலுள்ள 18 அடி உயரமான வேம்பம் மரத்தில் ஏறி இவர் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதோடு, அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகள் அலுவலகத்தின் முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஹூங்கம – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்வாறு தமது உரிமைகளை வென்றெடுக்க சாகும்வரை உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர்.
அத்தோடு, மரத்தின் மேலுள்ளவர் கையில் விஷ போத்தலை வைத்திருப்பதாகவும், தமது இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிட்டும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என கூறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
15 வருடங்களாக குறித்த இடத்தில் தனது குடும்பத்தால் தெங்கு, பலா போன்ற நிலையான பயிர்கள் வளர்க்கப்பட்டு வருவதாகவும், வயல் செய்வதாகவும், தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை பெற்றுள்ளதாகவும், இந்தநிலையில் இந்த நிலத்துக்கான அனுமதிப் பத்திரத்தை கோரிச் செல்லும் போதெல்லாம், அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து தாம் வாழ்ந்து வருவதாகவும், பள்ளி செல்லும் இரு சிறுவர்கள் உள்ள தனக்கும், கணவருக்கும் வேறு நிலங்கள் ஏதும் இல்லை எனவும், உண்ணாவிரதம் இருக்கும் குடும்பத் தலைவி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது தாம் பயிர் செய்துள்ள நிலத்தில் தண்ணீர் வசதி வழங்கப்படவில்லை என கூறியுள்ள அவர், தண்ணீர் விநியோகத்திற்காக போடப்பட்டிருந்த குழாய்களும் கழற்றிச் செல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனவே அந்த இடத்துக்கான பத்திரம், பயிர்களுக்கு தேவையான நீர் மற்றும் கழற்றிச் செல்லப்பட்ட குழாய்கள் ஆகியவற்றை பெற்றுத் தருமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating