ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்ம நபர் தாக்குதலில் ஒருவர் பலி – 3 பேர் படுகாயம்…!!
ஜெர்மனி நாட்டில் முனிச் நகர் அருகேயுள்ள கிராபிங் ரெயில் நிலையத்தில் நேற்று மர்ம நபர் எதிர்பாராத விதமாக பயணிகள் மீது தாக்குதல் நடத்தினான். இதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியான நிலையில் 3 பேர் காயம் அடைந்தனர்
ஜெர்மனி நாட்டில் முனிச் நகர் அருகேயுள்ள கிராபிங் ரெயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.50 மணிக்கு ‘எஸ் பான்’ பயணிகள் ரெயிலில் ஏறிய மர்ம நபர் தீடீரென அருகில் இருந்த ஒருவரை கத்தியால் வெட்டினான். அடுத்தடுத்து மேலும் 3 பேரை அவன் கத்தியால் வெட்டிச்சாய்த்தான். இதனால் அந்த ரெயில் நிலையத்திலும், ரெயிலிலும் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 4 பேரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். இருப்பினும் 50 வயதான ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முறையே 43, 55, 58 வயதான 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய தீவிரவாதியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்த தாக்குதலை அவன் தொடங்கும்போது அவன் போட்ட கோஷம், அவன் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த தீவிரவாதி என அடையாளம் காட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜெர்மனியில் இருந்து 800 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து ஈராக்கிலும், சிரியாவிலும் சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating