பஹ்ரைன் தீவிபத்து: விழுப்புரம், பெரம்பலூர் தொழிலாளர்கள் 17 பேர் பலி உடல்கள் சென்னை வருகின்றன!
பஹ்ரைன் நாட்டுத் தலைநகர் மனாமாவில் இந்தியத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 17 தமிழர்கள் பலியாயினர். தமிழகத்தைசத் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 80 இந்தியர்கள் படுகாயமடைந்தனர். தலைநகர் மனாமாவில் புதாம்பியா என்ற இடத்தில் ராயல் டவர் என்ற ஹோட்டல் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியில் தமிழகம், கேரளம், ஆந்திராவைச் சேர்ந்த 300 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு 3 மாடிக் கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இரண்டரை மணியளவில் 3 வது மாடியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயில் சிக்கியும், கரும் புகையில் சிக்கியும் இவர்கள் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அதிர்ஷடவசமாக உயிர்தப்பிய சீனிவாசன் என்பவர் கூறுகையில், அதிகாலை மூன்று மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. ஏ.சி. சாதனத்திலிருந்து மின்சாரம் கசிவு ஏற்பட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களை அடையாளம் கண்டு வருகிறோம் என்றார்.