குறைந்த மதிப்பெண் பெற்று விடுவோமோ, என்ற அச்சத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை…!!
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பகத்சிங் நகரை சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற தபால்காரர். அவருடைய மனைவி மகேசுவரி. இவர் கோவை ஜூடிசியல் கோர்ட்டில் தலைமை எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் சக்திகணேஷ் (வயது 17). இவர் காரமடையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சக்திகணேஷ் டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்று மருத்துவ நுழைவு தேர்வு எழுதினார். இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வு முடிவு வெளியாக இருந்ததால் நேற்று அதிகாலையில் இருந்தே சக்தி கணேஷ் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில் காலை 8 மணிக்கு நடராஜன் தனது மனைவியை வேலைக்கு அழைத்து சென்றார். இதனால் வீட்டில் யாரும் இல்லை. அப்போது மனஉளைச்சலில் இருந்த சக்திகணேஷ், மருத்துவ படிப்புக்கு ஏற்ற அளவிற்கு பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் கிடைக்குமா? குறைந்த மதிப்பெண் கிடைக்குமோ என்று கவலை அடைந்துள்ளார். மனவேதனையில் இருந்த சக்திகணேஷ் திடீரென்று வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர் சக்திகணேஷ் 1,200-க்கு 821 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Average Rating