சாலையில் குற்றுயிராக கிடந்த நபர்: ஹீரோவாக மாறி காப்பாற்றிய செவிலியர்..!!
பிரித்தானியாவில் நடைபாதை ஒன்றில் குற்றுயிராக கிடந்த நபரை சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியில் பட்டப்பகலில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென்று ரத்தவெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிய நபர்கள் குறித்து எதுவும் தெரியாத நிலையில், குறிப்பிட்ட நபரை செவிலியர் ஒருவர் ஹீரோ போன்று காப்பாற்றியுள்ளார்.
படுகாயமடைந்த நபர் விழுவதை அதுவழியே சென்றுகொண்டிருந்த செவிலியர் Abigail Bamber கண்டுள்ளார். உடனடியாக செயல்பட்ட அவர் அந்த நபருக்கு முதலுதவிகளை அளித்துள்ளார்.
தொடர்ந்து மருத்துவமனைக்கும் தொலைப்பேசியில் தகவல் தெரிவித்துவிட்டு அந்த நபருக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்துள்ளார்.
படுகாயமடைந்த அந்த நபர் தொடக்கத்தில் மூச்சு விடுவதில் சிரமப்படுவதை அறிந்த செவிலியர் அபிகால், உடனடியாக அவருக்கு உயிர்காக்கும் முதலுதவிகளை வழங்கியுள்ளார்.
சுயநலமற்ற அவரது சமயோசித செயலுக்கு உடனடியாக பலன்கிடைத்தது. படுகாயமடைந்து சுயநினைவை இழந்திருந்த அந்த நபர் சில நிமிடங்களில் மூச்சு விடத்துவங்கியுள்ளார்.
இதனிடையே மருத்துவக் குழுவினருடன் அவசர ஊர்தியும் அங்கு வர, அந்த நபரை அங்கிருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரதான செவிலியராக பணியாற்றி வரும் அபிகால் தமது பிறந்த நாள் காரணமாக சம்பவத்தன்று விடுமுறையில் இருந்துள்ளார்.
தமது தோழியருடன் இணைந்து நகரை சுற்றிவரும் போது தான் நடைபாதையில் அந்த நபர் நிலைகுலைந்து விழுவதை அபிகால் கண்டுள்ளார்.
செவிலியர் அபிகாலின் இந்த சேவையை அப்பகுதியில் குவிந்த அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். விடுமுறையில் இருந்தாலும் கடமை உணர்ச்சிக்கு விடுமுறை இல்லை என்பதை இச்சம்பவம் உறுதிப்படுத்தியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating