மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பு…!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் செயற்பாட்டினை கண்டித்தும் சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிரூபம் ஒன்றிணைக் கண்டித்தும் இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00மணி தொடக்கம் நாளை சனிக்கிழமை காலை 8.00மணி வரை ஒருநாள் பணிப் பகிஸ்கரிப்பாக இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு வைத்தியர்கள் மட்டுமே கடமைக்கு சென்றுள்ளதாகவும் ஏனைய அனைத்து பிரிவு வைத்தியர்களும் பணி பகிஸ்கரிப்பில் இணைந்து கொண்டுள்ளதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் திருமதி விஜி திருக்குமார் தெரிவித்தார்.
இந்த பணிப் பகிஸ்கரிப்பு காரணமாக வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் போன்றவற்றிற்காக வருகைதந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன் மருந்துகள் பெறமுடியாமல் திரும்பிச் செல்வதையும் காணமுடிகின்றது.
வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் பணிப்பாளரின் அலுவலகத்தில் தினமும் தமது செயற்பாடுகள் தொடர்பில் பதிவுசெய்து கையொப்பம் இடவேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபம் ஒன்று அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஏனைய வைத்தியசாலைகளில் அது சாத்தியமற்றது என வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களினால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மட்டும் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வற்புறுத்துவதாக வைத்தியர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
இந்த பணிப்பகிஸ்கரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் சந்திப்பும் இதன்போது நடைபெற்றது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் திருமதி விஜி திருக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதேநேரம் இன்று காலை தமது பணி பகிஸ்கரிப்பு தொடர்பான அறிவித்தலை வெளிநோயாளர் பிரிவு பகுதியில் காட்சிக்காக வைத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த வைத்திய பணிப்பாளர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் உப தலைவரை நோயாளிகள் மற்றும் தாதியர்கள் முன்பாக வைத்து தரக்குறைவான முறையில் நடாத்தியதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.
Average Rating