துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் கூட்டம்: டல்லாஸ் நகருக்கு விரைகிறார், ஒபாமா…!!
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் கருப்பின மக்களின் போராட்டத்தை அடக்க முயன்ற சம்பவத்தில் பலியான ஐந்து போலீசாரின் மறைவுக்கு இன்று நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
அமெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் அடிக்கடி கருப்பினத்தவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து டல்லாஸ் நகரில் கடந்த வாரன் கருப்பின மக்களின் போராட்டத்தை போலீசார் அடக்க முயன்றபோது போராட்டக்காரர்களில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து போலீசார் உயிரிழந்தனர்.
அமெரிக்க மக்களை உலுக்கிய இந்த தாக்குதல் தொடர்பான செய்தியை அறிந்ததும் ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயண திட்டத்தை மாற்றிய அதிபர் பராக் ஒபாமா உடனடியாக வாஷிங்டன் நகருக்கு திரும்பினார்.
இந்நிலையில், டல்லாஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து போலீசாரின் இறுதி யாத்திரையும், உடல் அடக்கமும் இன்று நடைபெறுகிறது.
இதையொட்டி, டல்லாஸ் நகரில் இன்று நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். மேயேர்சன் சிம்போனி மையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating