உ.பி.யில் காதலிக்க மறுத்த மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதியை ஒருதலையாக காதலித்த வாலிபர் ராம்குமார் தனது காதலை ஏற்க மறுத்ததால் அவரை வெட்டிக்கொன்றார். பின்னர் போலீஸ் பிடிக்கச் சென்ற போது ராம்குமாரும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இது போன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடந்துள்ளது. இங்கு தப்பால் என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் சந்தீப் மாலன் (19) என்ற மாணவர் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் மாணவி நேகா (18) என்பவரும் அவருடன் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இருவரும் அலிகார் அருகில் உள்ள பக்கத்து பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் நட்புடன் பழகி வந்தனர். நேற்று மதியம் கல்லூரியில் தேர்வு நடந்து கொண் டிருந்தது. அப்போது வகுப்பறைக்குள் திடீர் என்று புகுந்த மாணவர் சந்தீப்தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து நேகாவின் தலையை நோக்கி சுட்டார். இதில் மாணவி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
சக மாணவ- மாணவிகள் ஆசிரியர்கள் கண் எதிரில் இந்த சம்பவம் நடந்தது. அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற நிலையில் மாணவர் சந்தீப்பும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனே மாணவ- மாணவிகளும் ஆசிரியர்களும் அலறியடித்து ஓடினார்கள். போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்த போது இருவரும் பிணமாக கிடந்தனர். கொலையை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
மாணவர்கள் கூறும் போது, நேகாவை சந்தீப் விரும்பினார். தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை அவர் எற்க மறுத்ததுடன் சந்தீப்பை உதாசீனப்படுத்தி வந்தார். இதனால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக சந்தீப் இந்த விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என்று தெரிவித்தனர். போலீசாரும் இதே கோணத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Average Rating