டெக்சாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி..!!
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் அங்கு டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரில் இருந்து 30 மைல் தொலைவில் அமைந்துள்ள பாஸ்டிராப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிற சத்தம் கேட்டது.
அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது, இந்த சம்பவத்தில் ஒரு ஆண், 2 பெண்கள், ஒரு குழந்தை என 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததைக் கண்டனர். இன்னொரு குழந்தை படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுவது தெரிய வந்தது.
உடனடியாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த நகர போலீஸ் உயர் அதிகாரி விக்கி ஸ்டெபானிக் நிருபர்களிடம் பேசுகையில், “இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. கொல்லப்பட்டவர்கள் யார், யார் என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது. இந்த தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து இன்னும் தெரிய வரவில்லை” என கூறினார்.
இருப்பினும் பலியான 4 பேரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள்தான் என ஒரு தகவல் கூறுகிறது.
Average Rating