மக்களின் உயிரைப் பறித்த காட்டுயானை – ஐந்து நாட்களின் பின் சிக்கியது…!!
மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்திலுள்ள சிப்பிமடு காட்டுப்பகுதியில், கடந்த காலங்களில் அப்பிரதேச மக்கள் சிலரின் உயிரை பறித்ததுடன் அவர்களது வீடுகளையும் பயிர்களையும் நாசமாக்கி வந்த 30 வயது மதிக்கத்தக்க காட்டுயானை பிடிப்பட்டுள்ளது.
இந்த யானை நேற்று மாலை வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் மயக்க ஊசி மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் போன்றோரின் ஆலோசனைக்கமைய கடந்த ஐந்து நாட்கள் இரவு பகலாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மிருக வைத்திய நிபுணர் பி.தேவசுரேந்திர, மிருக வைத்தியர்களான கீர்த்திசிறி மேவின், சமன் குமார உட்பட 21 பேர் கொண்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணத்தின் தீவிர முயற்சியினால் இக் காட்டு யானை மயக்க ஊசி மருந்து ஏற்றப்பட்டு பிடிக்கப்பட்டது.
இதனை அநுராதபுரத்திலுள்ள வனலாகாவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் சுற்றுவட்ட உத்தியோகத்தர் என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.
இதேவேளை யானை பிடிப்பட்டவுடன் ஸ்தலத்திற்கு வருகை தந்த பிரதேசசெயலாளர் எஸ்.சுதாகர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு ஆகியோர் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களை சந்தித்து உரையாடினர்.
இக் காட்டுயானை கடந்த காலங்களில் வெல்லாவெளி, வவுணதீவு, செங்கலடி பிரதேச கிராமங்களில் பலரது உயிரை பறித்ததுடன் நூற்றுக்கணக்கான வீடுகளையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating