சென்னை அயனாவரம் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகையை கொள்ளையடித்த ஊழியர் நண்பருடன் கைது…!!
சென்னை அயனாவரம் சோமசுந்தரம் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் கோபாராம். இவருடைய கடையில் கடந்த மாதம் 3–ந்தேதி 9 கிலோ தங்க நகைகள், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை போனது. அவரது கடையில் வேலை பார்த்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபக் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து கொள்ளையடித்துவிட்டு தப்பியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
கொள்ளை சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் தனிப்படை அமைத்து, ராஜஸ்தான் மாநிலம் சென்று அவர்களை தேடினர். ஆனால் யாரும் போலீசார் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.
ராஜஸ்தான் மாநில போலீசார் உதவியுடன் அவர்களை கைது செய்யும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்லுவாடா பகுதியில் வைத்து தீபக்கையும், அவருடைய நண்பர் அம்ருத்தையும் ராஜஸ்தான் மாநில போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்து உள்ளனர்.
தற்போது அங்குள்ள பிரதாப் நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து ராஜஸ்தான் மாநில போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள மற்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். தற்போது அவர்களிடம் இருந்து 2 கிலோ தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை அயனாவரம் போலீசாருக்கு, ராஜஸ்தான் மாநில போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அயனாவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.
Average Rating