ஆரல்வாய்மொழியில் சொகுசு கார் மோதி கல்லூரி மாணவர் பலி…!!
ஆரல்வாய்மொழி பொய்கைநகரை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் அய்யப்பன் (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரது நண்பர் முகேஷ் (19). இவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். அய்யப்பனும், முகேசும் நேற்று மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழியில் இருந்து காவல்கிணறு நோக்கி சென்றனர்.
ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியை தாண்டி சென்றபோது எதிரே வந்த சொகுசுகார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அய்யப்பனுக்கு தலை, உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த முகேசை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதை அடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். ஆத்திர மடைந்த அவர்கள் விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை அடித்துநொறுக்கினார்கள். காரின் மீது பாறாங்கல்லை போட்டும் உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
சொகுசு காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவனந்தபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் அஜி (29) என்பவரையும் போலீசார் பிடித்துள்ளனர். அவரிடமும் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating