தற்கொலை செய்து கொண்ட பொலிசின் 9 நிமிட பகீர் மரண வாக்குமூலம்..!!
சென்னை பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை பொலிஸ்காரர், தனது நண்பரிடம் அளித்த 9 நிமிட மரண வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது ஊர் நண்பர்களான சக்திவேல், மணிகண்டன், அருண் ஆகியோருடன் கோபிநாத் வசித்து வந்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட அன்று அதிகாலை 4 மணிக்கு சக்திவேலுக்கு போன் செய்து, ‘எனக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. சம்பளமும் கடந்த சில மாதங்களாக வரவில்லை. இதனால், சகோதரி கல்யாணத்துக்காக வாங்கிய கடன் 2.5 லட்சத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.
கடன் சுமையினால் அதிக தலைவலி ஏற்படுகிறது. சென்னைக்கு வந்த பிறகுதான் எனக்கு இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த உலகை விட்டு போகலாம் என முடிவு செய்துள்ளேன்’ என்று சுமார் 9 நிமிடம் கோபிநாத் பேசியுள்ளார்.
அப்போது சக்திவேல் ஆறுதல் வார்த்தைகள் கூறி பணியை முடித்துவிட்டு வா பேசலாம் என கூறி தொடர்பை துண்டித்துள்ளார். ஆனாலும், சக்திவேலின் மனதில் ஒரு குழப்பம் ஓடிக்கொண்டிருந்தது. எப்போதும் இப்படி பேசாத கோபிநாத் ஏன் இப்படி பேசுகிறான் என சந்தேகம் ஏற்பட்டு, மீண்டும் 4.40 மணிக்கு கோபிநாத்தை தொடர்பு கொண்டார் சக்திவேல்.
அப்போது கோபிநாத் போனை எடுக்கவில்லை. இந்த 40 நிமிடத்திற்குள் தான் கோபிநாத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
முன்னதாக, கோபிநாத் தனது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பக்கங்களை நள்ளிரவு 12 மணியளவில் நீக்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும், கோபிநாத் தற்கொலை குறித்து கமிஷனர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடமும் தீவிர விசாரணை நடைபெறும் என்று பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Average Rating