ஆணாக பிறந்து பெண்ணாக மாறி ரசிகர்களின் மனதில் குடியிருக்க வரும் நாயகி..!!
திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்வதும், பிச்சை எடுப்பதும் தான் இவர்களது தொழில் என்ற சாயம் பூசப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பாலினத்தவர்களான எங்களாலும் சாதிக்கமுடியும் என கூறியுள்ளார் அஞ்சலி அமீர்.
இனி இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் ஜொலிக்கப்படும் பிரபலமாக மாறவிருக்கிறார் அஞ்சலி.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி தமிழிலும் ராம் இயக்கத்தில் அறிமுகமாகவிருக்கிறார்.
கேரளா கோழிக்கோட்டில் பிறந்த இவர் சிறுவயதிலேயே தாயை இழந்தவர். அதன்பின்னர் தனது வாழ்க்கையில் நடந்தவற்றை விவரிக்கிறார் அஞ்சலி.
நான் பத்தாம் வகுப்பை நிறைவு செய்த பின்னர் தான் எனது உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர ஆரம்பித்தேன். நான் ஆணாக பிறந்தாலும், பெண்கள் போன்று இருப்பது, பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது போன்றவற்றில் எனக்கு அதிக ஈடுபாடு இருந்தது.
நான் திருநங்கை என்பதால், எனது தந்தை என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை வீட்டை விட்டு வெளியேறினேன். அதன்பின்னர் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரில் இருக்கும் திருநங்கை இனத்தவர்களுடன் வாழ்ந்து வந்தேன்.
அங்கு வாழ்ந்து வந்தபோது, எனது வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்தேன். நடனம் ஆடும் வாய்ப்பு, பாலியல் தொழில் வாய்ப்புகளே அதிக வந்து என்னை மனதளவில் காயப்படுத்தின, ஆனால் இவற்றையெல்லாம் கண்டு மனம் தளராமல், எனது வாழ்வில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.
நடிப்பு என்பது எனக்கு பிடித்தமான ஒன்று. சிறுவயதில் இருந்தே அதன் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். இதனால் மொடலிங் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கால்பதித்தேன். ஆனால் நான் திருநங்கை என்ற காரணத்தால், ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் என்னை நிராகரித்தன.
அதன்பின்னர் தான், நடிகர் மம்முட்டியின் உதவியுடன் சினிமாவிற்குள் நுழைந்துள்ளேன். நான் நடிப்பதற்கு அவர் என்னை பல வகைகளில் ஊக்கப்படுத்தியுள்ளார். சினிமா துறையில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அதுமட்டுமின்றி, நான் இப்போது ஒரு கலைஞர், இதனால் என்னை திருநங்கை என்று அழைக்க முடியாது. ஏனெனில் ஆண் கலைஞர், பெண் கலைஞர் என்று அழைப்பதில்லை. மாறாக கலைஞர் என்றுதானே அழைப்பார்கள். அதுபோன்று நானும் இப்போது ஒரு கலைஞர் ஆவேன் என கூறுகிறார் அஞ்சலி.
Average Rating