மதுக்கடைக்குள் புகுந்து ரகளை செய்த மயில்- அமெரிக்காவில் பரபரப்பு..!! (வீடியோ)
அமெரிக்காவின் தென்மேற்கு மாநிலமான லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து 13 மைல் தொலைவில் அர்காடியா எனும் நகரம் உள்ளது. சான் கேப்ரியல் மலைத்தொடரின் அடிவார பிரதேசமான அர்காடியாவில் வண்ணமிகு மயில்கள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இதனால், இப்பகுதியில் பறவை வேட்டையில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், அர்காடியாவின் அருகில் உள்ள நகரமான சான் பெர்னார்டினோவில் தோகை விரித்து அழகாக ஆட வேண்டிய மயிலானது, மதுக்கடைக்குள் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ள சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சார் பெர்னார்டியாவில் கானெம் என்பவர் மதுகூடத்துடன் இணைந்த உணவகத்தை நடத்தி வருகிறார். கடந்த வாரத்தில் அவரது உணவகத்துக்கு வெளியே பெண் மயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனைக்கண்டு கானெம் வியப்படைந்த சிறிது நேரத்திலேயே, உணவகத்தினுள் பெண் மயில் அதிரடியாக பறந்து நுழைந்தது.
கூரிய நகங்களுடன் நுழைந்த மயிலைக்கண்டு மிரட்சியடைந்த கானெம் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து, விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் கையில் வலையுடன் கடையை முற்றுகையிட்டனர்.
ஆனால், அதிகாரிகளுக்கு தண்ணி காட்டிய மயில் வலையில் சிக்காமல், மதுக்கூடத்தில் ஒரு இடம் கூட விடாமல் மாறி மாறி பறந்துள்ளது. மயிலின் கால் மற்றும் தோகையில் சிக்கி உயர் ரக மது புட்டிகள் சல்லி சல்லியாக நொறுங்கின. இறுதியில் ஒரு வழியாக மயிலை வலையில் விழ வைத்த அதிகாரிகள் அதனை வெளியே எடுத்துச் சென்றனர்.
90 நிமிடங்கள் பாடாய்ப் படுத்திய மயிலால் சேதமடைந்த மது புட்டிகளின் விலை மட்டும் 500 அமெரிக்க டாலர்கள் என தலையில் துண்டைப்போட்டு சோகத்துடன் சொல்லியுள்ளார் மதுக்கூட உரிமையாளர் கானெம். இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.32,232 ஆகும்.
Average Rating