நடிகை கடத்தில் வழக்கில் மற்றொரு நடிகர் கைது..!!
கேரளாவில் ஓடும் காரில் நடிகையை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் ரவுடி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் நடிகர் திலீப் 2-வது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று கேரள ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அரசு தரப்பு வக்கீலின் கடும் எதிர்ப்பு காரணமாக திலீப்புக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
நடிகர் திலீப்பின் 2-வது மனைவி நடிகை காவ்யா மாதவன் ஏற்கனவே போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அந்த வாக்குமூலத்தில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் திலீப்புக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு வக்கீல் கூறியதை ஏற்றே திலீப்புக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஜாமீன் கிடைக்காததால் 50 நாட்களுக்கு மேலாக திலீப் ஜெயிலில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 4-ந்தேதி வரும் சூழ்நிலையில் திலீப் அதை கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஓடும் காரில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திலீப்புக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவும் மலையாள திரையுலகினரும், அரசியல் கட்சியினரும், தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மலையாள நடிகர் அஜு வர்க்கீஸ் என்பவரும் அந்த நடிகை தொடர்பாக பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டு இருந்தார். அப்போது அவர் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி, அஜு வர்க்கீஸ் மீது களமச்சேரி போலீசில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து அஜு வர்க்கீஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோர்ட்டுக்கு சென்ற போது தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கும்படி அஜு வர்க்கீஸ் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து நேற்று களமச்சேரி போலீசார் நடிகர் அஜு வர்க்கீசை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு ஜாமீனில் விடுவித்தனர். நடிகையின் பெயரை வெளியிட்ட புகாரில் மலையாள நடிகர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating