நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்போ, பின்போ பாஜ.வுடன் தான் கூட்டணி வைப்பார் சந்திரசேகர ராவ்: காங். மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி கருத்து!!
‘‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்போ அல்லது பிறகோ பாஜ.வுடன் தான் கூட்டணி அமைப்பார்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெய்பால் ரெட்டி தெலங்கானா அரசியல் நிலவரம் குறித்து கூறியதாவது: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை மதச்சார்பற்ற தலைவராக நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஏனெனில், 2014 நாடாளுமன்றம் மற்றும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலின் போதே அவர் பாஜ.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பினார். ஆனால், தெலுங்கு தேசம் பாஜ அணியில் இணைந்து விட்டதால் வேறு வழியின்றி தனித்து போட்டியிட்டார். இப்போது, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்போ அல்லது பின்னரோ அவர் பாஜ அணியுடன் கூட்டணி சேருவார்.
இதுதான் என்னுடைய கணிப்பு. இதைவிட்டால் அவருக்கு வேறு வழி கிடையாது. அவர் காங்கிரசுடன் ஒருபோதும் கூட்டணிக்கு வரப்போவது இல்லை. ஏனெனில், தெலங்கானாவில் நாங்கள் அவருக்கு கடும் போட்டி கொடுத்து வருகிறோம். எனவே, அவர் முன் இப்போதுள்ள ஒரே வாய்ப்பு பாஜ.தான்.
அவர் உண்மையிலேயே பிரதமர் மோடியை எதிர்த்து நிற்கவில்லை. அவரது பேட்டியை பார்த்து அவர் மோடியை எதிர்த்து அரசியல் செய்கிறார் என்று யாராவது நினைத்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஏனெனில், ரூபாய் நோட்டு தடை உட்பட மோடி கொண்டு வந்த அனைத்து திட்டங்களுக்கும் முதன்முதலில் வரவேற்பு அளித்ததும், அதை அமல்படுத்தியதும் சந்திரசேகர ராவ்தான். இவ்வாறு அவர் கூறினார்.
‘தேர்தல் முடிவு மாறக்கூடியது’: திரிபுரா, நாகலாந்து, மேகாலயா தேர்தல் முடிவு குறித்து ஜெய்ப்பால் ரெட்டி கூறுகையில், ‘‘நம் நாட்டில் தேர்தல் முடிவுகள் புவியியல் ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் மாநிலத்துக்கு மாநிலம் மாறக் கூடியது. அதன் அடிப்படையில்தான் தேர்தல் முடிவுகள் வரும்’’ என்றார்.
Average Rating