சிரியாவில் அமைதி பூவை மலர வைக்க வேண்டும் : ஈஸ்டர் செய்தியில் போப் வலியுறுத்தல்!!(உலக செய்தி)
‘சிரியாவில் படுகொலைகளை தடுத்து, அமைதி பூக்களை மலர வைக்க வேண்டும்’ என்று போப் பிரான்சிஸ் தனது ஈஸ்டர் செய்தியில் வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புகழ்மிக்க செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு போப் ஆசி வழங்கினார். பின்னர், அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது:
உலகம் முழுவதும் சமாதானப் பூக்கள் பூக்க வேண்டும் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். இந்த சமாதானப் பூக்கள் முதலில் சிரியாவில் இருந்து மலரட்டும். இதற்காக உலகம் முழுவதையும் சேர்ந்த அரசியல், ராணுவ தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சில நாடுகளில் நடத்தப்படும் படுகொலைகளுக்கு துரித தீர்வு எட்டப்பட வேண்டும்.
கொரிய தீபகற்பத்திலும் அமைதி பேச்சுக்கான முயற்சிகள் நடக்கின்றன. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இந்த அமைதி பேச்சுவார்த்தையை மலர வைத்துள்ளன. இதன்மூலம், அங்கும் அமைதி மலர்கள் மலர பிரார்த்தித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Average Rating