குடிப்பது தொடர்பான விமர்சனம் உபி அமைச்சர் வீட்டின் மீது தக்காளி, முட்டை தாக்குதல்!!(உலக செய்தி)
மது குடிப்பது தொடர்பாக விமர்சனத்தை வெளியிட்ட உபி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வீட்டின் மீது தக்காளி, முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. உத்தர பிரதேச சிறுபான்மை நலவாரியத்துறை அமைச்சராக இருப்பவர் ஓம்பிரகாஷ். இவர் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதிய கட்சியை சேர்ந்தவர். நேற்று முன்தினம் வாரணாசிக்கு சென்ற அவர், மதுகுடிப்பவர்கள் தொடர்பாக கடுமையான விமர்சனத்தை வெளியிட்டார். அவர் கூறும்போது,’ அதிகமாக குடிப்பதாக என் இனத்தின் மீது மட்டும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அதிகம் குடிப்பது 2 இனத்தவர்கள்்தான் (அவர்களின் பெயரையும் குறிப்பிட்டார்). இது அவர்களின் பழங்கால தொழில்.
இப்போது எனது இன மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து இன மக்களும் குடிக்கிறார்கள்’ என்று தெரிவித்தார். ஓம்பிரகாஷின் இந்த விமர்சனம் உபி.யில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று காலை லக்னோ ஹசரன்கஞ்ச் பகுதியில் உள்ள அமைச்சர் ஓம்பிரகாஷ் வீட்டின்முன் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தக்காளி மற்றும் முட்டைகளை கொண்டு வந்து அமைச்சர் வீடு மீது வீசினார்கள். மேலும் அமைச்சருக்கு எதிரான கோஷத்தை எழுப்பினார்கள். சில இளைஞர்கள் அமைச்சர் வீட்டில் வைத்திருந்த பெயர் பலகையை உடைத்தார்கள். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டம் நடத்தியவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால் சம்பவம் தொடர்பாக யாரையும் போலீசார் கைது செய்யவில்லை.
Average Rating