பிரசந்தாவின் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் !!
பிரசந்தா சந்திர மகாலனோபிஸ், ஓர் இந்திய அறிவியலாளரும், புள்ளியியல் அறிஞரும் ஆவார்.
இவர் கடந்த 1893 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் திகதி கொல்கத்தாவில் பிறந்தார். கொல்கத்தாவில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், அதன்பின் அங்கிருந்த பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.
இயற்பியல் இளநிலை பட்டப்படிப்பை முடித்த அவர், அதன்பின் மேல்படிப்பிற்காக 1913 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு சென்றார்.
அங்கு லண்டன் பல்கலைகழகத்தில் சேர எண்ணினார். ஆனால் அவர் இறுதியில் தனது நண்பருடன் கேம்பிரிட்ஜ் நகரில் இருந்த கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்.
அதன்பின் இந்தியா திரும்பிய அவர் சிறிது காலம் கொல்கத்தா பிரெசிடென்சி கல்லூரியில் வகுப்புகள் எடுத்தார். அதன்பின் மீண்டும் இங்கிலாந்து நாட்டிற்கு திரும்பினார். அங்கு தனது வேலைகளை தொடர்ந்தார்.
அதைத்தொடர்ந்து 1931 ஆம் ஆண்டில் மூன்று அறிஞர்களுடன் இணைந்து மகாலனோபிஸ், இந்தியப் புள்ளியியல் கழகத்தை நிறுவினார். மகாலனோபிஸ் தொலைவு என்னும் இவருடைய புள்ளியியல் அளவீடு ஒன்றுக்காக இவர் அறியப்படுகின்றார்.
இவர் இந்தியாவில் மாந்த உடலிய அளவீடுகளுக்கு முன்னணியான பங்களிப்புகள் செய்தவர். இந்தியப் புள்ளியியல் கழகத்தை இவர் நிறுவியதற்காகவும், பெரிய அளவில் கருத்துக் கணிப்பு செய்வதற்கான முறைகள் வகுத்ததற்கும் இவர் அறியப்படுகின்றார்.
1972 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி உயிரிழந்த அவரின் 125 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று அவரை போற்றும் வகையில் இணையதள தேடுபொறியான கூகுள் அவரது பிறந்த நாளை தனது முகப்பு பக்கத்தில் ´டூடுள்´ வெளியிட்டு கொண்டாடி வருகிறது.
Average Rating