திரையுலகில் ஒரு புதிய முயற்சி!!(மகளிர் பக்கம்)
திரைத்துறையின் பின்னணியில் உழைக்கும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. அவர்களுக்கு இழைக்கப்படும் உழைப்பு சுரண்டல், பாலியல் தொல்லைகள் குறித்து இதுவரை விவாதம் நடந்தது கிடையாது. இந்த நிலையை மாற்ற திரைத்துறையில் அடிப்படை கூலித் தொழிலாளர் முதல் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு அரணாக, தங்களுக்கான உரிமைகளை பெற்றெடுக்கும் அமைப்பாக உருவானது தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்.
இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையாக “திரையாள்” என்கிற காலாண்டு இதழ் வெளியாகி இருக்கிறது. நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையில் பெண்களுக்கான உரிமைகளை உரத்து பேசும் பத்திரிகையாக உருவாகி இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு காந்தம்மாள் உருவாக்கிய “தென் இந்தியத் திரைப்பட மகளிர் ஊழியர் சங்கம்” எப்படி தோன்றியது… எவ்வாறு அவர்கள் உரிமைகளை தக்க வைத்துக்கொண்டனர் என்பதை பற்றி வேர்கள் என்கிற தலைப்பில் முதல் பக்கமே சுவாரஸ்யமான தகவல்.
பெண் ஆளுமைகளின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. திரைத்துறையை நோக்கி வரும் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக வலம் வரப்போவது நம் திரையாள். திரையாள் பத்திரிகையின் இதழாசிரியர் ஈஸ்வரியின் தலையங்கத்தில் சொல்வது அதைத் தொடர்ந்து வரும் கட்டுரைகள் உறுதிப்படுத்துகிறது. இதுவரை திரைப்படங்களையும், திரைப்பட நடிகை, நடிகர்களையும் விமர்சனம் செய்து வரும் பத்திரிகைகளை மட்டுமே நாம் சந்தித்திருப்போம்.
ஆனால் திரைத்துறையில் இயங்கும் பெண்களுக்கென்று ஒரு பத்திரிகை உருவாகி இருப்பது இதுவே முதல் முறை. பாலின பாகுபாடின்றி சமத்துவத்தைப் படைக்க வேண்டும் என்கிற திரையாளின் முயற்சிகள் வரவேற்கத்தக்க ஒன்று. இந்தப் பத்திரிகைத் துறையில் தன்னுடைய முதல் காலடியை மிக அழுத்தமாகவும், உறுதியாகவும் வைத்திருக்கிறது திரையாள். திரைத்துறையில் உழைக்கும் பெண்களுக்கு திரையாள் நல்ல வழிகாட்டியாக இருப்பாள் என நம்புவோம்.
Average Rating