பாகிஸ்தானில் திடீர் மின்தடை: ராணுவப் புரட்சி என்று புரளி
பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. பராமரிப்புப் பணியின்போது ஓரிடத்தில் ஏற்பட்ட மின் அழுத்த மாற்றம் பொது மின் தொகுப்பையே பாதித்து எல்லா ஊர்களிலும் மின்சார சப்ளை நின்றுபோனது. பாகிஸ்தானில் இப்படி மின் தடை ஏற்பட்டதே இல்லை என்பதால் பல்வேறு வதந்திகள் உலவ ஆரம்பித்துவிட்டன. முஷாரப்பை நீக்கிவிட்டு, வேறு யாரோ பதவிக்கு வந்துவிட்டார் என்றே மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.
1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீர் ராணுவப் புரட்சி மூலம்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப் ஆட்சியைக் கைப்பற்றினார். இப்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை நடந்தது. ஆனால் அதுவும் மற்றொரு வதந்திக்கு இடமானது. அவருக்கு மாரடைப்பு என்று சிலர் பேச ஆரம்பித்ததால், அரசு அதை மறுக்க நேர்ந்துள்ளது.
தாய்லாந்தில் சமீபத்தில் ராணுவப்புரட்சி ஏற்பட்டு பிரதமர் சினவத்ர பதவியை இழந்துள்ளார். வெளிநாடு சென்ற அவர் தாய்நாட்டுக்கே திரும்பவில்லை. இது பாகிஸ்தானியர் மனதில் பசுமையாக நினைவில் இருக்கிறது.
அல்-காய்தாவுக்கு எதிரான போரில் தங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் பாகிஸ்தான் மீது குண்டுகளை வீசி நாசப்படுத்துவோம் என்று அமெரிக்க அரசு தன்னை மிரட்டியதாக முஷாரப் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார். எனவே பாகிஸ்தானியர் இந்த வதந்திகளை ஓரளவுக்கு நம்பி, பத்திரிகை அலுவலகங்களுக்கு “போன்’ செய்து தகவல்களைக் கேட்டவண்ணம் இருந்தனர்.