விழிப்புணர்வே போதும்!! (மருத்துவம்)
குழந்தை இல்லை என்பது ஒரு தம்பதியின் தனிப்பட்ட பிரச்னை என்பதைத் தாண்டி ஒரு சமூகப் பிரச்னையாகிறது நம்நாட்டில். பச்சிலை தொடங்கி மண்சோறு என அத்தனை சோதனைகள் குழந்தைக்காக. இதெல்லாம் தேவையே இல்லை. முறையான விழிப்புணர்வு போதும் என்கிறார் மருத்துவர் சாமுண்டி சங்கரி.
“உலகமெங்கும் குழந்தைப்பேறு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணம் இன்றைய லைஃப் ஸ்டைல்தான். பெரும்பாலும் உணவுப்பழக்கம் மாறிவிட்டது. ஊட்டச்சத்துகள் அற்ற ‘ஜங் ஃபுட்’டையும் பொரித்த உணவுகளையும் இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதோடு, நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களைப் பயிரிட உபயோகிக்கிற ரசாயன உரங்களின் தாக்கமும் குழந்தைப் பேறின்மைக்கு முக்கிய காரணமாகிறது. குடியும் சிகரெட்டுமாக திரியும் பெரும்பாலான இளைஞர்களுக்கு அந்தப் பழக்கங்களும் குழந்தைப் பேறின்மைக்குக் காரணமாகும் என்பது தெரிவதில்லை.
பெண்களின் மனநிலை மாறுதல் இன்னொரு முக்கிய காரணமாகிவிட்டது. ஏற்கனவே பருமன், ஸ்ட்ரெஸ் மற்றும் உணவுப் பழக்கத்தால் ‘பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்’ போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இன்றைய தலைமுறை பெண்கள் தங்கள் திருமண வயதை தள்ளிப்போடுகிறார்கள். அப்படியே சீக்கிரம் திருமணமாகிவிட்டாலும் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடுகிறார்கள். குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுவதால் சிலருக்கு கருப்பையின் உள்ளே இருக்கும் சவ்வு தடித்துவிடும் Endometrial Thickness பிரச்னை ஏற்படுகிறது. இதுவும் குழந்தையின்மைக்குக் காரணமாகிறது’’ என்கிறார் சாமுண்டி சங்கரி.
Average Rating