தாய்லாந்து பிரதமராக முன்னாள் ராணுவ கமாண்டர் பதவியேற்றார்
தாய்லாந்தில் முன்னாள் ராணுவ கமாண்டரும் மன்னரின் ஆலோசகருமான சுராயுத் சுலானான்ட் (62) இடைக்கால பிரதமராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். பிரதமராகப் பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சுலானன்ட் தாய்லாந்தின் தென்பகுதியில் அதிகரித்துவரும் முஸ்லிம் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு தமது அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்றார்.
மேலும் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா அரசின் கொள்கைகளால் பிளவுபட்டு நிற்கும் நாட்டை ஒற்றுமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சுலானன்ட் தெரிவித்தார்.
தற்போதய நிலையில் நாட்டை தலைமையேற்று நடத்த சுராயத் சுலானன்ட் பொருத்தமானவர் என்பதால் மன்னர் அவரை பிரதமராக நியமித்துள்ளார் என ராணுவ ஜெனரல் சோந்தி தெரிவித்தார்.
சுராயத் சுலானன்ட் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து புதிய அமைச்சரவைக்கான பட்டியல் இந்த வாரம் வெளியிடப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.