உள்ளாட்சி: 18,431 பேர் போட்டியின்றி தேர்வு
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 18,431 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,30,962 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 4 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். இதுவரை இந்த அளவுக்கு அதிகமாக போட்டியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 4,85,159 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 8,374 பேரின் மனுக்கள் தள்ளுபடியாகின. இதையடுத்து 4,76,620 பேர் களத்தில் நின்றனர். அவர்களில் பலர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் இறுதியாக களத்தில் உள்ளனர். இந்நிலையில் 18,431 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
மற்ற இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கும் பணி வேகமாக நிடந்து வருகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்பார்வையில் வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 8000 வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்ததாக கருதப்படுகிறது. அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
தமிழகம் முழுவதும் 80,458 வாக்குச சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்காக 866 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிராமப்புறங்களில் 436 மையங்களும், நகர்ப்புறங்களில் 436 மையங்களும் உள்ளன.
18ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்குச் சீட்டுக்கள் என்பதால் முடிவுகள் வெளிவருவதில் தாமதம் ஆகும். அன்று பிற்பகலுக்கு மேல்தான் முடிவுகள் வெளியாகத் தொடங்கும் எனத் தெரிகிறது. 20ம் தேதி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.