மதுரை இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி திமுக50994: அதிமுக19909: தேமுதிக17394
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் 31,085 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் துவக்கம் முதலே திமுக வேட்பாளர் கௌஸ் பாட்சா முன்னிலையில் இருந்து வந்தார். பல சுற்றுக்கள் நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கௌஸ் பாட்சா 50994 வாக்குகளைப் பெற்றார். அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா 19909 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக வேட்பாளர் பன்னீர்செல்வம் 17394 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். போட்டியிட்ட 13 சுயேச்சைகள் டெபாசிட் இழந்தனர்.
திமுகவைச் சேர்ந்த பிடிஆர் பழனிவேல்ராஜனின் மறைவைத் தொடர்ந்து கடந்த 11ம் தேதி இங்கு இடைத் தேர்தல் நடந்தது. மொத்த வாக்காளர்களான 1.32 251 பேரில் 90,887 பேர் வாக்களித்தனர். இது 68.72 சதவீத வாக்குப் பதிவாகும். இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. மருத்துவக் கல்லூரியின் பயோ கெமிஸ்ட்ரி துறை அறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையையொட்டி அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மொத்தம் 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. ஒவ்வொரு மேசையிலும் ஒரு மேற்பார்வையாளர், 3 ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 10.30 மணிக்கு முடிந்துவிட்டது.
வாக்கு எண்ணிக்கையையொட்டி மருத்துவக் கல்லூரி வளாகத்தைச் சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக, அதிமுக, தேமுதிகவைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இறுதி வாக்கு விவரம்: மொத்த வாக்குகள்: 1,32,251
பதிவானவை: 90,887
கௌஸ் பாட்ஷா (திமுக) 50,994.
ராஜன் செல்லப்பா (அதிமுக) 19,909.
பன்னீர் செல்வம் (தேமுதிக) 17,934.
வாக்கு வித்தியாசம்: 31,085.